செம்பட்டி, பிப். 26: பஸ்நிலையங்களில் டைம் கீப்பருக்கு கமிஷன் குறைக்கப்பட்டதால் அவர்கள் தனியார் பஸ்களுக்கு ஆதரவாக செயல்பட வாய்ப்புள்ளதாக புகார் எழுந்துள்ளது. பெரும்பாலான பஸ்ஸ்டாண்ட்களில் அரசு, தனியார் பஸ்களின் இயக்கத்தை முறைப்படுத்தும் வகையில், டைம் கீப்பர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தனியார் பஸ்களின் வரம்பு மீறலை கண்டிப்பது, அரசு பஸ்களின் இயக்கத்தை நெறிப்படுத்துவது மட்டுமே பணியாகும். ஆனால் பஸ் ஊழியர்கள், அதிகாரிகளின் சொந்த பணிகளிலும் ஈடுபடுத்துவர். தவிர்க்க முடியாத சூழலில், பிற பணிகளையும் செய்து வருகின்றனர். டைம் கீப்பர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட சம்பளமோ, இதர சலுகைகளோ வழங்கப்படுவதில்லை. மாறாக, பஸ் கண்டக்டர்கள் வழங்கும் கமிஷன் தொகை மட்டுமே வருமானமாகும்.
ஒரு பஸ்சுக்கு ஒரு ரூபாய் 50 பைசா என்ற வீதத்தில் வழங்கி வந்தனர். இதற்கான அனுமதியும் அளிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த நிர்ணயத்தை, சில நாட்களாக மாற்றியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கமிஷன் தொகையை பஸ்சுக்கு 50 பைசாவாக குறைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். கமிஷனை குறைத்துள்ளதால், டைம் கீப்பர்கள் முழுமையான பணியை மேற்கொள்ளாமல் தவிர்க்கும் நிலை உண்டாகி தனியார் பஸ் நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட தூண்டும். ஏற்கனவே மினி பஸ்களை வட்டார போக்குவரத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் தற்போது இதன்மூலம் அரசு பஸ்களின் வருமானம் குறையும் நிலை ஏற்படும். எனவே டைம் கீப்பர்களுக்கான முறையாக கமிஷன் தொகையை கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.