×

வாடியூர், ஆனைகுளம் பகுதி மாணவ, மாணவிகள் அவதி கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகள்

சுரண்டை, பிப். 22:   சுரண்டை அருகே உள்ள வாடியூரில் இருந்து ஆனைக்குளம் மற்றும் கரையாளனூர் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்று காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 2 மாதங்களுக்கு முன்பு சாலை பெயர்க்கப்பட்டது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் பெரிய ஜல்லிகற்கள் குவிக்கப்பட்டன.
தொடர்ந்து சாலை பணிகள் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் இந்த வழியாக பேருந்துகள், கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகள் நடந்தே ஆனைக்குளத்தில் உள்ள பள்ளிக்கும், சுரண்டை காமராஜர் அரசு கல்லூரிக்கும் செல்ல வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். சாலையில் ஜல்லிகள் சிதறி கிடப்பதால் சைக்கிளில் செல்லும் மாணவ, மாணவிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். வியாபாரிகளும் 3 கிமீ சுற்றிச் செல்ல வேண்டியதுள்ளது.
எனவே வாடியூரில் இருந்து ஆனைக்குளம் மற்றும் கரையாளனுர் செல்லும் சாலையை உடனடியாக புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாணவ, மாணவிகளும், பெற்றோரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Vadiyur ,area ,Annunakulam ,road ,
× RELATED மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில்...