மணவாளக்குறிச்சி, பிப். 21: அகில இந்திய அளவில் நடைபெற்ற அறிவியல் அறிவு திறன் போட்டியில் நாகர்கோவில் கார்மல்நகர் பிஷப் ரெமிஜியுஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். பள்ளி மாணவர்களின் அறிவு திறன், செயலாற்றும் திறன் ஆகியவற்றை வளர்க்கும் வகையில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் சார்பில் அகில இந்திய அளவில் ஸ்பாட் தேர்வினை 2 கட்டங்களாக 3 பிரிவுகளில் நடத்தப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கேந்திர வித்யாலயா மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு பிரிவிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் பங்கேற்ற நாகர்கோவில் கார்மல்நகர் பிஷப் ரெமிஜியுஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர் ரமண கைலாஷ், ஜூனியர் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடமும், அடிப்படை பிரிவில் அகில இந்திய அளவில் மாணவர் விகாஷ் முதல் 100 இடத்தில் ஒருவராகவும் தேர்வு செய்யப்பட்டு சாதனை படைத்தனர். இம்மாணவர்களை பள்ளி தாளாளர் அருட்பணி ஸ்டான்லி சகாயசீலன், முதல்வர் செல்வராஜ், துணை முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர். மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்டிய ஆசிரியர் மைக்கேல் ஆபிரகாமிற்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. ஜூனியர் பிரிவில் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்த மாணவர் ரமண கைலாஷ் குமரி மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.