×

திருத்துறைப்பூண்டி அருகே நெய்க்காரன்தோப்பு கிராமத்தில் அடிப்படை வசதியின்றி மக்கள் அவதி: நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு

திருத்துறைப்பூண்டி, பிப்.20: நெய்காரன் தோப்பு கிராமத்தில் அடிப்படைவசதியின்றி மக்கள் அவதியுற்று வருகின்றனர். இதனால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பாமணி நெய்காரன்தோப்பு கிராமத்தில் 25க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு சாலை வசதி, மயான கொட்டகை போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காததை கண்டித்து வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஜெயராமன் கூறுகையில், கஜா புயலில் பாதிக்கப்பட்ட எங்கள் பகுதிக்கு எந்த நிவாரணப்பொருட்களும் கொடுக்கப்படவில்லை. சாய்ந்த 150 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களுக்கும் நிவாரண தொகை வழங்கப்படவில்லை என்றார்.
முருகதாஸ் கூறுகையில், வேதை ரவுண்டானா முள்ளியாற்று பாலத்திலிருந்து  ஆற்றங்கரையில் தெற்கு பாமணிக்கு செல்லும் சாலை 2 கி.மீட்டர் தூரம் ஆகும். 8 ஆண்டுகளுக்கு முன்பு பழுதடைந்த இந்த சாலை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 500 மீட்டருக்கு மட்டும் வீடுகள் உள்ள பகுதியில் மட்டும் தார் சாலை அமைத்தனர். சாலை துவங்கும் இடத்திலும், முடியும் இடத்திலும் தார்சாலை போடாததால் கப்பி கற்கள் பெயர்ந்து நடக்ககூட முடியாத சூழ்நிலை உள்ளது. எங்கள் பகுதியில் யாருக்கும் உடல்நிலை சரியில்லை என்றால் அவசரத்திற்கு மருத்துவமனைக்கு கூட செல்லமுடியாது மற்றும் 108 ஆம்புலன்ஸ்கூட இந்த சாலையில் வரமுடியாது.
இந்த சாலையில் எந்த நேரமும் சிலர் மது அருந்தி கொண்டிருப்பதால் பொதுமக்கள் இந்தவழியாக செல்ல அச்சப்படுகின்றனர்.  தற்போது வேதை சாலை கம்பி பாலம் வழியாக அவசர தேவைக்கு சென்று வருகிறோம். இதன் அருகிலேயே கோடைகாலத்தில் வண்டிப்பாலம் அமைத்து தரவேண்டும் என்றார்.
ராஜா கூறுகையில்: நெய்காரன்தோப்பு தோப்பு கிராமத்திற்கு நாடு சுதந்திரமடைந்து 72 ஆண்டுகளாகியும் இதுவரை மயானகொட்டகை அமைத்துதரவில்லை. ஆற்றுப்படுகையில்தான் சுடுகாடாக பயன்படுத்தி வருகிறோம்.
கோடைகாலத்தில் யாராவது இறந்தால் இறுதிசடங்கு செய்வதற்கு சிரமம் கிடையாது. ஆனால் மழைக்காலத்தில் மிகவும் அவதியடைந்து வருகிறோம். நெய்காரன்தோப்பு கிராமத்தை தொடர்ந்து புறக்கணித்து வருவதை கண்டித்து வரும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்லாமல், தொடர்ந்து வரும் தேர்தலையும் புறக்கணிப்போம் என்றார்.

Tags : village ,Thiruthuraipondi ,
× RELATED பைக், டிராக்டர் நேருக்கு நேர் மோதி...