பெரம்பலூர்,பிப்.20: பெரம்பலூர் அருகே கும்பகோணத்திற்கு இணையான குன்னம் மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மாசிமக தீர்த்தவாரி திருவிழா நேற்று நடந்தது.
பெரம்பலூர் அருகே குன்னம் கிராமத்தில் கும்பகோணத்தில் மகாமகத்தையொட்டி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவிற்கு இணையான ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஆதிகும்பேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில், மாசி மக தீர்த்தவாரி திருவிழா நேற்று நடந்தது. இதனையொட்டி நேற்று காலை 5 மணிக்கு கோமாதா பூஜையும், அதனைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிசேகமும், 6 மணிக்கு தீபாராதனையும், சுவாமி ஆதிகும்பேஸ்வரரை கோயிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மகாமக குளத்தில் சிறப்பு அபிசேகமும், நீராடி மகாமக தித்தவாரி நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
மாலை சுவாமி கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும் அன்னதானமும் நடைபெற்றது. பின்னர் இரவு குன்னம் முக்கிய வீதிகளில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. நிகழ்ச்சியை முன்னிட்டு அன்னதானம், வாண வேடிக்கையும் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.