×

காஸ் சிலிண்டர் வெடித்து வயதான தம்பதி பலி

திருப்போரூர், பிப்.19: திருப்போரூரில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் சாலையில் உள்ள கல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (74). இவரது மனைவி கஸ்தூரி (68). துணிக்கடை நடத்தி வந்தனர். பின்னர், அத்தொழிலில்  நஷ்டம் ஏற்பட்டதால், இங்கு சிறிதாக குடிசை வீடு கட்டி, அதன் முன்புறம் ஒரு பெட்டிக் கடை நடத்தி வந்தனர்.பெட்டி கடை மூலம் கிடைத்த வருமானத்தில், ஆனந்தராஜ் குடும்பம் நடத்தினார். இவர்களது மகள் திருமணமாகி, விருதுநகரில் கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும், ஆனந்தராஜ், கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். அங்கு சாப்பிட்டு முடித்ததும், தம்பதி தூங்கினர். அந்த வீட்டின் சமையலறை பகுதியில் திடீரென நேற்று அதிகாலையில் காஸ் சிலிண்டர் திடீர் என வெடித்தது. இதில் குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது.

தீ மளமளவென வீடு முழுவதும் பரவியதில் இருவரும் உயிருக்கு பயந்து அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை.இதுகுறித்து தகவலறிந்து மறைமலைநகர் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வீரர்கள், சம்பவ இடத்துக்கு சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராடி குடிசை வீட்டில் ஏற்பட்ட தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள்  வயதான ஆனந்தராஜ், கஸ்தூரி ஆகியோர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர்.இதையடுத்து, காயார் போலீசார், சடலங்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், விருதுநகரில் வசிக்கும் ஆனந்தராஜின் மகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், வீட்டுக்குள் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக காஸ் சிலிண்டர் வெடித்து தீ பரவியதால், விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...