பாபநாசம், பிப். 15: பாபநாசம் ரயில்வே கேட் அருகே புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராட்டம் நடத்த முயன்ற பெண்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.தஞ்சை மாவட்டம் பாபநாசம் ரயில்வே கேட் அருகில் டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட்டது. இதை கண்டிப்பதுடன், கடையை மூடக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் போராட்டம் நடத்த திரண்டனர். இந்த தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பாபநாசம்- சாலியமங்கலம் சாலை முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகும். இந்த சாலையில் தனியார் மேல்நிலைப்பள்ளி, தனியார் பெண்கள் கல்லூரி உள்ளது. இந்த பள்ளி, கல்லூரிக்கு மாணவிகள் நடந்து செல்வர். இதேபோல் சாலியமங்கலம் சாலையில் உள்ள பெருமாங்குடி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து பாபநாசத்தில் உள்ள பள்ளிக்கு மாணவிகள் நடந்தும், சைக்கிளிலும் வருவர்.ஏற்கனவே இந்த சாலையில் தனியாக நடந்து வருவதற்கு மாணவிகள் பயப்படுவர். தற்போது டாஸ்மாக் கடை திறந்திருப்பதால் மாணவிகள், பெண்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாவர். எனவே விரைந்து டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்றனர்.