திருச்சி, பிப்.15: காதலர் தினத்தை கொண்டாட எதிர்ப்பு தெரிவித்து மலைக்கோட்டை கோயிலுக்கு இந்து அமைப்புகள் தாலியுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.உலகம் முழுவதும் நேற்று (பிப்ரவரி 14ம் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட்டது. திருச்சியில் காதலர் தினத்தை திருவிழாபோல் கொண்டாடிய காலம் உண்டு. அப்போது மெயின்கார்ட் கேட்டில் காதலர் தின கொடியேற்றப்பட்டது. கடும் எதிர்ப்பு காரணமாக கடந்த சில வருடங்களாக கொடியேற்றும் விழாக்கள் கொண்டாடப்படவில்லை.ஆனாலும் நேற்று காதலர் தினத்தையொட்டி திருச்சி நகர தியேட்டர்கள், கோயில்கள் மற்றும் முக்கொம்பு பூங்காவில் காதல் ஜோடிகளின் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது. இதை எதிர்பார்த்தே போலீசாரும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.திருச்சி மலைக்கோட்டை கோயிலுக்கு நேற்று காலை 7 மணி முதல் கோட்டை போலீசார் பலத்த காதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.காலை 9 மணியளவில் சில ஜோடிகள் மலைக்கோட்டை கோயிலுக்கு வந்தனர். அப்போது திருமணமாகாத ஜோடிகளை கோயிலுக்கு செல்ல அனுமதி மறுத்து, அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். அதேபோல் தொடர்ந்து வந்த பல காதல் ஜோடிகளை கோயிலுக்குள் நுழையவிடாமல் வாசலிலேயே விரட்டி விடப்பட்டனர். இந்நிலையில் காலை 11 மணி அளவில் அங்கு இந்து அமைப்பை சேர்ந்த ஆனந்த், சரவணக்குமார் உள்ளிட்ட 6 பேர் காவி கொடி பிடித்தபடி கோயிலக்கு வந்தனர். அவர்கள் கையில் தாலி கயிறுகளையும் கொண்டு வந்திருந்தனர். காதலர் தினத்திற்கு எதிராக கோஷம் எழுப்பியபடி கோயி
லுக்குள் சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து, நாங்கள் இங்கு காதல் ஜோடியை அனுமதிப்பதில்லை. எனவே கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு செய்யாமல் செல்லுங்கள் என கூறினர். அப்போது போலீசாருக்கும், இந்து அமைப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்களை அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். நேற்று காதலர் தினத்தில் பிரச்னைகள் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதற்காக 50க்கும் அதிகமான போலீசார் மலைக்கோட்டையின் உச்சி, யானை கட்டும் பகுதி, என்எஸ்பி ரோடு பகுதி ஆகிய 3 இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கொம்பு: இதேபோல் சுற்றுலாத்தலமான திருச்சி முக்கொம்பிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு காதல் ஜோடிகள் கூட்டம் கூட்டமாக வந்தனர். தண்ணீரின்றி காவிரி வறண்டு கிடந்த நிலையிலும் காதல் ஜோடிகள் திரண்டு வந்து அமர்க்களப்படுத்தினர். அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க திருச்சி மாவட்ட போலீசார் 30க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல சினிமா தியேட்டர்கள், கல்லணை ஆகிய இடங்களிலும் காதல்ஜோடிகளின் கூட்டம் அலைமோதியது. திருச்சி மேலூர் வண்ணத்துப்பூச்சி பூங்காவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பூங்காவிற்கு வரும் இளைஞர்கள், இளம்பெண்களை விசாரித்து
அனுப்பி வைத்தனர்.