×

கலைநிகழ்ச்சி மூலம் பெண் சிசு பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

ஓசூர், பிப்.15: பெண் சிசு, பெண் குழந்தை படிப்பு பாதுகாப்பு குறித்து கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது. பெண்சிசு கொலைகளால், நாடு முழுவதும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் 18 சதவீதம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் இசை மற்றும் நாடகப்பிரிவு சார்பில் நாடு முழுவதும் பெண்குழந்தைகள் பாதுகாப்பு, அவர்களின் கல்வி, இளம்வயது திருமணங்களை தடுத்தல், பெண்குழந்தைகளுக்கான உரிமைகள் போன்றவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும், மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் மற்றும் தெருக்கூத்துகள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஓசூர் பழைய நகராட்சி எதிரில், தர்மபுரி சீனிவாச நாடக குழு ஆசிரியர் ராமகிருஷ்ணன்  தெருக்கூத்து கலைஞர்களின் பெண் கல்வி, பாதுகாப்பு, இளம்வயது திருமணங்கள் தடுத்தல் போன்றவை குறித்து நாடகங்கள் நடித்தும், தாளங்களை இசைத்து நடனங்கள் ஆடியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.  ராஜா, ராணி, மந்திரி, கோமாளி ஆகிய வேடங்கள் போட்டு, அரசின் மூலம் மக்களுக்கு சொல்ல வேண்டிய கருத்துகளை எடுத்துரைத்தனர். இதன் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வும், தெருக்கூத்து கலைஞர்களுக்கு வாழ்வாதாரமும் கிடைத்து வருகிறது.

Tags : concert ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...