×

எண்ணூர் முகத்துவார சீரமைப்பு குறித்த கருத்துக்கேட்பு கூட்டத்தை மீனவர்கள் புறக்கணிப்பு : கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அதிகாரிகள் திணறல்

திருவொற்றியூர்: எண்ணூர் முகத்துவாரத்தை சீரமைப்பது குறித்த கருத்து கேட்பு கூட்டத்தில், மீனவர்களின் கேள்விகளுக்கு அதிகாரிகள் முறையாக பதிலளிக்காததால், கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர்.எண்ணூர் முகத்துவார ஆற்றில் ஏராளமான மீனவர்கள் இறால், நண்டு, மீன் போன்றவற்றை பிடிக்கும் தொழில் செய்து வருகின்றனர். இந்த முகத்துவார ஆற்றில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ரசாயன கழிவு,  வடசென்னை அனல்மின் நிலையத்தின் சுடுநீர் மற்றும் பக்கிங்காம் கால்வாயில் இருந்து வரக்கூடிய கழிவுகள் ஆகியவற்றால் ஆறு மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து வருகின்றன. இதனால், இதை நம்பி உள்ள மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எனவே, எண்ணூர் முகத்துவார ஆற்றில் கழிவு மற்றும் சுடுநீர் விடுவதை தடுக்க வேண்டும், தூர்வாரி முறையாக பராமரிக்க வேண்டும், என  மீனவர்கள் மற்றும் பொது நல சங்கங்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.

இதையடுத்து, இந்த முகத்துவார ஆற்றின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சீரமைப்பு குறித்து சென்னை நதிநீர் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு சீரமைப்பு நிறுவனம் ஆகியவை இணைந்து கடந்த  8 மாதங்களாக பல்வேறு ஆய்வுகளை நடத்தி வந்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் எண்ணூர் முகத்துவாரத்தில் பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம், எண்ணூரில் நடைபெற்றது. இதில் துறைமுகம், மாசுக்கட்டுப்பாடு வாரியம், மாநகராட்சி, மின் வாரியம்  போன்ற பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், அப்பகுதியை சேர்ந்த மீனவர் நல சங்கங்கள், பொதுநல அமைப்புகள், கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது  கருத்துக்களை தெரிவித்தனர். அப்போது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கழிவுகள் ஆற்றில் கலப்பதாலும், துறைமுகத்தின் ஆக்கிரமிப்பாலும் முகத்துவாரம் சீரழிந்து விட்டது. இதனை தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, என்று கேள்வி  எழுப்பிய பொதுமக்கள், கழிவுநீர் கலந்த ஆற்று நீரை பாட்டிலில் பிடித்து வந்து அதிகாரிகளிடம் காண்பித்தனர். அப்போது, மீனவர்களின் புகார்களுக்கு அதிகாரிகள் சரியான பதில் அளிக்காததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கூட்டத்தை புறக்கணித்து வெளியேறினர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மாநகராட்சி மீது குற்றச்சாட்டு
அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த 8 மாதங்களாக முகத்துவார ஆற்றின் பாதிப்பு குறித்து ஆய்வு செய்தோம்.  அப்போது பக்கிங்காம் கால்வாயில் 9 இடங்களில் மாநகராட்சி கழிவுநீரை  விடுவது தெரிந்தது. அதுமட்டுமின்றி 5  இடங்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதும் தெரியவந்துள்ளது. அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த முகத்துவார ஆற்றில் மீன்வளம் பாதிக்கப்படுவதை தடுக்க ஆற்றை சீரமைக்க  திட்ட அறிக்கை  தயார் செய்து, அரசிடம் நிதி பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

Tags : Fishermen ,meeting ,Ennore ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...