மணப்பாறை, பிப்.14: துவரங்குறிச்சி அருகே குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள கார்வாடி பகுதியில் 300 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக கடும் குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் மருங்காபுரி ஒன்றிய அலுவலகத்தில் புகார் செய்தும் குடிநீர் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கார்வாடி கிராம மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த புத்தாநத்தம் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்ட கார்வாடி பகுதி மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.