×

பிஎஸ்என்எல் ஊழியர்கள் 3 நாள் ஸ்டிரைக் அறிவிப்பு

புதுச்சேரி, பிப். 14:  பிஎஸ்என்எல் அதிகாரிகள் மற்றும் ஊழியர் சங்கங்களின் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:4 ஜி அலைக்கற்றை சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குவதற்கு அனுமதியளிக்க வேண்டும். 3வது ஊதிய உயர்வு மாற்றத்தை உடனே வழங்க வேண்டும். அனைத்து பிஎஸ்என்எல் பென்சன்தாரர்களுக்கு 2017 ஜனவரி முதல் பென்சனை மாற்றியமைக்க வேண்டும். பிஎஸ்என்எல் சொத்துக்களை மாற்றிக் கொடுப்பதை விரைந்து முடிக்க வேண்டும். பிஎஸ்என்எல் செல்போன் டவர்களை பராமரிக்க அவுட்சோர்சிங் முறையை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே வரும் 18ம் தேதி முதல் 20ம் தேதி வரை பிஎஸ்என்எல் அனைத்து ஊழியர்கள், அதிகாரிகள் சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. அதன்பேடி, புதுச்சேரியிலும் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும். இதில் 350க்கும் மேற்பட்ட ஊழியர்கள், அதிகாரிகள்
பங்கேற்கின்றனர். ஸ்டிரைக் போராட்டத்தால் தொலைபேசி பழுதுபார்த்தல், புதிய இணைப்பு வழங்குதல், பில்லிங் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்படும். ஏற்கனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 11ம் தேதி முதல் பல்வேறு இடங்களில் தெருமுனை பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். 15ம் தேதி (நாளை) பிஎஸ்என்எல் தலைமை அலுவலகத்தில் இருந்து குடும்பத்துடன் பேரணி செல்ல இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : BSNL ,
× RELATED சாத்தான்குளம்- பண்டாரபுரம் சாலையில்...