×

அம்பத்தூரில் பரபரப்புமாநகர பஸ் கண்டக்டரை வெட்டி கொல்ல முயற்சி: பைக்கில் துரத்தி வந்து கத்தி வீசிய வாலிபர்களுக்கு வலை

அம்பத்தூர், பிப்.14:  மாநகர பஸ்சை நிறுத்தாததால் ஆத்திரமடைந்த பைக் ஆசாமிகள், கண்டக்டரை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, அண்ணா சாலையில் இருந்து ஆவடி அடுத்த பட்டாபிராமுக்கு மாநகரப் பேருந்து (தடம் எண்: 27 எச்) நேற்று பிற்பகல் புறப்பட்டது. பேருந்தை டிரைவர் முருகன் (42) ஓட்டினார். கண்டக்டராக பால்வர்ணன் (51) பணியில் இருந்தார். பேருந்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.இந்த பேருந்து மாலை 4 மணி அளவில் அம்பத்தூர் தொழிற்பேட்டைக்கு உட்பட்ட மண்ணூர்பேட்டையில் வந்து கொண்டிருந்தது.அப்போது பஸ்சை பின்தொடர்ந்து 2 பைக்கில் நான்கு வாலிபர்கள் படுவேகமாக வந்தனர். பக்கவாட்டில் கைகளால் அடித்து பஸ்சை நிறுத்தும்படி கண்டக்டரிடம் கூறியுள்ளனர். அவர்களது கையில் ஆயுதங்கள் இருந்ததை பார்த்த கண்டக்டர் பால்வர்ணன், நிறுத்துவதற்கு ‘விசில்’’ அடிக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த, பைக்கில் வந்த ஒருவன், தான் கையில் வைத்திருந்த ஒன்றரை அடி நீளமுள்ள கத்தியை எடுத்து கண்டக்டர் இருக்கையில் அமர்ந்திருந்த பால்வர்ணனை வெட்ட முயன்றுள்ளார். அது தவறி பக்கவாட்டில் விழுந்ததில் கண்ணாடி உடைந்தது. கத்தி பேருந்துக்குள் விழுந்தது. இதை பார்த்த, பயணிகள் அலறி சத்தம்போட்டுள்ளனர். உடனே  பஸ்சை டிரைவர் நிறுத்தியுள்ளார். பயணிகள் கீழே இறங்குவதற்குள்  மர்ம நபர்கள் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து, டிரைவர் பேருந்தை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்துக்கு ஓட்டி சென்றார். இது குறித்து,  பால்வண்ணன் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.இந்த பேருந்தில் கல்லூரி மாணவர்கள் யாராவது வந்து இருக்கலாம். அவர்களை வெட்டும் நோக்கத்தில் பஸ்சை பின்தொடர்ந்து மர்ம நபர்கள் பைக்கில் வந்திருக்கலாம். பஸ்சை  நிறுத்தாமல் சென்ற ஆத்திரத்தில், பக்கவாட்டு கண்ணாடியை உடைத்து, கண்டக்டரை கொல்ல முயற்சித்து இருக்கலாம் என போலீஸ் தரப்பில் கருதப்படுகிறது.இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து, மாநகர பஸ் கண்டக்டரை வெட்டி கொல்ல முயற்சி நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், அம்பத்தூர் தொழிற்பேட்டை சி.டி.எச் சாலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான பைக் பதிவெண்ணை வைத்து தகராறு செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Ambattur ,
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...