தர்மபுரி, பிப்.13: தர்மபுரி மாவட்டம் அதகபாடியில் பிரசித்தி பெற்ற, ஸ்ரீ லட்சுமி நாராயணசுவாமி கோயிலில் நேற்று ரதசப்தமி விழா நடந்தது. விழாவையொட்டி அதிகாலை 5.30 மணிக்கு கோயில் வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சூரிய பிரபை வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் சீனிவாச பெருமாள் எழுந்தருளினார். இதைதொடர்ந்து கோயிலில் இருந்து சூரிய பிரபை வாகன புறப்பாடு நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டு பரவசம் அடைந்தனர். கோயிலில் இருந்து புறப்பட்ட சூரிய பிரபை வாகனம் விசேஷ மண்டபத்தை அடைந்தது. பின்னர் அங்கு சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு, காலை 7.30 மணி வரை அருள்பாலித்தார். காலை 7..35 மணிக்கு சீனிவாச பெருமாள் மீண்டும், கோயிலை சென்றடைந்தார். விழாவையொட்டி 5 ஆயிரம் பக்தர்களுக்கு பால், பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம், செயல் அலுவலர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.