×

ஆண்டிபட்டி அருகே சோகம் டூவீலர்கள் மோதியதில் 2 பேர் பலி

ஆண்டிபட்டி, பிப். 13: ஆண்டிபட்டி அருகே டூவீலர்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சையில் உள்ளார்.தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள கொத்தபட்டியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவரது மகன் நரேஷ்பாண்டியன் (23). வரதராஜபுரத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரது மகன் மனோஜ் (22), கருப்பையா என்பவரது மகன் முகிலன் (22). 3 பேரும் நண்பர்கள்.
நரேஷ்பாண்டியன் சென்னையில் தங்கியிருந்து வேலை தேடி வந்தார். சில தினங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்த அவர் நேற்று முன்தினம் இரவு சென்னை புறப்பட்டார். அவரை டூவீலரில் மனோஜ், ஆண்டிபட்டி அழைத்து சென்றார். அவர்களுடன் முகிலனும் அதே டூவீலரில் சென்றார்.வேலப்பர்கோயில் சாலையில், ஆரோக்கியகம் பகுதியில், எதிரே வந்த மற்றொரு டூவீலர், இவர்களது டூவீலர் மீது மோதியது. இந்த விபத்தில் மற்றொரு டூவீலரில் வந்த ராஜதானியைச் சேர்ந்த முருகன் மகன் ஹரீஷ் (22) படுகாயத்துடன், சம்பவ இடத்திலேயே பலியானார். நரேஷ்பாண்டியன், மனோஜ், முகிலன், மற்றொரு டூவீலரில் வந்த கணேசன் என்பவரது மகன் அஜய் (12) ஆகியோர் படுகாயமடைந்தனர். 4 பேரும் தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நரேஷ்பாண்டியன் உயிரிழந்தார்.தேனி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், அஜய் மற்றும் முகிலன் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது தொடர்பாக ராஜதானி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். டூவீலர்கள் மோதிய சம்பவத்தில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : tragedy killings ,Andipatti ,
× RELATED ‘தானேனானன்னா னானா… ஆ…’ அதிமுக...