×

மீஞ்சூர் அருகே மாயமான புதுமாப்பிள்ளை சடலமாக மீட்பு: கொலை செய்து கிணற்றில் வீசியது யார்? போலீசார் விசாரணை

பொன்னேரி, பிப்.13:  மீஞ்சூர் அருகே வருகிற மார்ச் மாதம் திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை கிணற்றில் சடலமாக கிடந்தார். அவரை யாராவது வெட்டி கொலை செய்து, சடலத்தை வீசினார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர். மீஞ்சூர் அண்ணா தெருவை சேர்ந்தவர் எத்திராஜ் மகன் லட்சுமணன் (25). தனியார் நிறுவன ஊழியர். கடந்த 10ம் தேதி காலை மீஞ்சூரில் நடைபெற்ற ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்ற அவர், இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள், அவரது செல்போனில் தொடர்பு கொண்டபோது சுட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பல இடங்களில் தேடியும் அவரை குறித்த தகவல் இல்லை. இது குறித்து 11ம் தேதி மீஞ்சூர் காவல்நிலையத்தில் லட்சுமணனின் சகோதரர் மோகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமணனை தேடி வந்தனர்.

இந்நிலையில்,  மீஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள ஐயப்பன் கோயில் பின்புறம் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றில் வாலிபர் சடலம் கிடப்பதாக நேற்று காலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் சென்று, சடலத்தை மீட்டனர். பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், அது காணாமல்போன லட்சுமணன் சடலம் என்றும், அவரை மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசியதும் தெரியவந்தது. மேலும், லட்சுமணனுக்கும், மீஞ்சூரை அடுத்த காணிப்பாக்கம் பகுதியை சேர்ந்த  ஒரு இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வருகிற மார்ச் மாதம் கரூரில்  திருமணம் நடக்க இருந்தது. இந்த சூழ்நிலையில் தான்  அவரை மர்ம நபர்கள் வெட்டிக்கொன்று சடலத்தை கிணற்றில் வீசியுள்ளனர்.

இதையடுத்து கொலை வழக்காக போலீசார் பதிவு செய்து,  லட்சுமணனை யார் வெட்டி கொன்றார்கள். கொலைக்கான காரணம் என்ன? காதல் விவகாரத்தில் அவரை தீர்த்து கட்டினார்களா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். போலீஸ் தரப்பில் கூறுகையில், லட்சுமணன் கொலை வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரித்து வருகிறோம். குற்றவாளிகள் பிடிபட்டால்தான் கொலைக்கான உண்மையான காரணம் தெரிய வரும் என்றனர்.

Tags : one ,town ,Meenjur ,well ,
× RELATED ஒளியாக அல்ல பேரொளியாக மாறுவோம்