×

பெரியார் காலனி பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பு

திருப்பூர்,பிப்.12: திருப்பூர் பெரியார் காலனியில் பஸ் ஸ்டாப் இருந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்பூர் அவினாசி ரோடு பெரியார் காலனி பஸ் ஸ்டாப்பில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிழற்குடை அகற்றப்பட்டது. பின்னர் புதிதாக அமைக்கப்படவில்லை. இதனால், ஆண்டுக்கணக்கில் பொதுமக்கள் வெயில் மற்றும் மழையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நிழற்குடை இருந்த இடம் தற்போது, ஆக்கிரமிப்புகளால் மாயமாகி உள்ளது. அருகில் உள்ள கடை உரிமையாளர்கள் தங்களது விளம்பர போர்டு மற்றும் பொருட்களை போட்டு ஆக்கிரமித்துள்ளனர். மேலும், கடைக்கு பொருட்களை கொண்டு வரும், வேன்கள் பஸ் ஸ்டாப்பில்  நிறுத்தப்படுவதால், பஸ்சுக்காக காத்திருக்கும் மக்கள் நடு ரோட்டில் நின்று தான் பஸ் ஏற வேண்டியுள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் நிறைந்த பகுதியான பெரியார் காலனியில் இருந்து, பழைய பஸ் நிலையம், புஷ்பா தியேட்டர், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு வேலைக்குச் செல்வோர் அதிகம். தற்போது, வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். வெயிலில் நிற்க முடியாமல் வயதானவர்களும், பெண்களும் தவிக்கின்றனர். பஸ் ஸ்டாப் ஆக்கிரமிப்பை அகற்றி, அந்த இடத்தில் புதிதாக நிழற்குடை அமைத்து சிரமத்தை போக்க வேண்டும் என்பதே, பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.இடிந்து விழும் தரமற்ற சாக்கடை கால்வாய்கள்திருப்பூர்,பிப்.12: திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாக்கடை கால்வாய் கட்டுமான பணியில் தரக்குறைவு காரணமாக, சுவர்கள் சரிந்து விழுகின்றன. இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள், கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.  திருப்பூர் மாநகராட்சி பகுதியின் பல்வேறு பகுதிகளிலும் சாக்கடை கால்வாய்கள் பெயரளவுக்கே கட்டப்பட்டு வருகின்றன. போதிய அளவு சிமென்ட், ஜல்லி பயன்படுத்தாமல் கட்டுவதால், விரைவிலேயே அவை இடிந்து விழுகின்றன. கடந்த ஓராண்டுக்குள் கட்டப்பட்ட சாக்கடை கால்வாய்கள் பல இடங்களில் சரிந்து விழுந்துள்ளன. இதுகுறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தபோதும், மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் உள்ளது. இதுகுறித்து காந்திநகர் பகுதி மக்கள் கூறியதாவது: சாக்கடை கால்வாய் கட்டுமானம் முடிந்து ஒரு ஆண்டு கூட ஆகவில்லை. சிமென்ட் மிக குறைவாகவே பயன்படுத்தினர். ஜல்லிக்கற்களை பயன்படுத்தாமல், பெரிய மெட்டல் கற்களை பயன்படுத்தினர். ஒப்புக்கு பூச்சு வேலை நடந்தது. கட்டுமான பணிக்காக குழி தோண்டப்பட்டது. பக்கவாட்டுச் சுவர் அருகே, மண் அணைத்து விட வேண்டும். ஆனால் பக்கவாட்டுச்சுவர் அருகே மண் இல்லாமல் குழியாக இருந்தது. தாக்குப்பிடிக்காமல் சரிந்து விழுந்து விட்டது. கட்டி முடிக்கும் முன்பே, சிமென்ட் பூச்சு உதிர்ந்து, கற்கள் வெளியே தெரிகின்றன. மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. தரமற்ற பணியை அவர்கள் கண்டுகொள்வதே இல்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Periyar ,
× RELATED ஊழல் பல்கலைக்கழகங்களும்… கைதாகும்...