அதிராம்பட்டினம், பிப். 12: அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சலைவழியாக நாகையில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு நூற்றுக்கணக்கான கண்டெய்னர் லாரிகள், ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அதேபோல் கேரளா, தூத்துக்குடி, கன்னியாகுமரி போன்ற பகுதிகளிலிருந்து வேளாங்கண்ணிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் இச்சாலை வழியாக செல்கிறது. அதோடு ஆயிரக்கணக்கான இரண்டு சக்கர வாகனங்களும்
சென்று வருகின்றன.
இந்நிலையில் நெரிசல் நிறைந்த அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் தினம் தோறும் இரவு பகலாக விபத்துகள் நடந்த வண்ணம் உள்ளது. பெரிய விபத்தில் சிக்கியவர்கள் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ஆப்பரேசன் தியேட்டர் மற்றும் விபத்து சிகிச்சை மையம் இல்லாததால் பட்டுக்கோட்டை பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அப்படி செல்லும் போது விபத்தில் சிக்கியவர்கள் அபாய கட்டத்தை அடைந்து ஒருசில நேரங்களில் உயிரிழக்கும் சம்பவங்களும்
நடந்து வருகின்றன.
எனவே அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் உயிர் காக்கும் விபத்து சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.