* தேர்தல் நிறுத்தி வைத்து அதிகாரி உத்தரவு
* திமுக, அதிமுக மோதலால் காஞ்சிபுரத்தில் பதற்றம்
காஞ்சிபுரம், பிப்.12: சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் திடீரென தேர்தல் அறிவிக்கப்பட்டது.கடந்த ஆண்டு ஏப்.27ம் தேதி சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு அர்பன் வங்கிக்கான இயக்குநர்கள் தேர்தல் நடந்தது. இதில் திமுக சார்பில் 11 பேர், அதிமுக 11, டிடிவி.தினகரன் அணியில் 11, பாஜ 1 என 37 பேர் வேட்பாளர்களாக போட்டியிட்டனர்.அப்போது அதிமுகவினர் ரகளையில் ஈடுபட்டதால், தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, புதிதாக வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் நடைபெறும் என கூட்டுறவு இணைப் பதிவாளர் சந்திரசேகரன் அறிவித்தார்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி.தினகரன் அணியை சோ்ந்த வேட்பாளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி கூட்டுறவு நகர வங்கி தேர்தல், எந்த நிலையில் நிறுத்தப்பட்டதோ, அதில் இருந்து அடுத்தகட்ட நடவடிக்கையை தொடரவேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் கடந்த 5 மாதங்களாக சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு அர்பன் வங்கி தேர்தல் கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன், காஞ்சிபுரம் மேட்டு கம்மாளத்தெருவில் உள்ள வள்ளி திருமண மண்டபத்தில் 11ம் தேதி (நேற்று) கூட்டுறவு சங்க தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இதைதொடர்ந்து நேற்று காலை தேர்தல் தொடங்கி, 10 மணி முதல் வாக்குப்பதிவு நடந்தது. மதியம் 1.20 மணியளவில் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் கணேசன், ஆதரவாளர்களுடன் அங்கு வந்தார்.
அப்போது, அவர்கள் வாக்குப்பதிவு பெட்டியை கீழே தள்ளி உடைத்து ரகளையில் செய்தனர். மேலும் அங்கிருந்த வாக்குச்சீட்டில் அதிமுகவினருக்கு வாக்களித்து பெட்டியில் போட்டதுடன், வாக்குச்சீட்டை ஜெராக்ஸ் எடுத்து வந்து அதிமுகவுக்கு வாக்களித்து பெட்டியில் போட்டனர்.இதை பார்த்த திமுகவினர், ஆதிமுகவினரை கண்டித்து, அராஜக அதிமுக ஆட்சி ஒழிக என கோஷமிட்டனர். அதிமுகவினரும் எதிர் கோஷமிட்டனர். இதனால், இருதரப்பினக்கும் மோதல் ஏற்படும் நிலையானது. பதற்றம் நிலவியது. தகவலறிந்து விஷ்ணு காஞ்சி இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பினரிடம் சமாதானம் செய்தனர். பின்னர், தேர்தல் அலுவலர் முத்துப்பாண்டியனுடன் ஆேலாசனை நடத்தி மதியம் 2.35 மணிக்கு வாக்குச்சாவடி மூடப்பட்டது.
தொடர்ந்து, தேர்தல் நிறுத்தப்பட்டதாக மாலை 5 மணிக்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.பொதுமக்களை எதிர்கொள்ள முடியாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாமல் காலம் கடத்தும் அதிமுக அரசு, கூட்டுறவுத்துறை தேர்தலையும் சந்திக்காமல் ரகளை செய்து தேர்தலை தள்ளி வைப்பது, அதிமுக தேர்தலை கண்டு அஞ்சுவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.