சேந்தமங்கலம், பிப்.8: பழங்குடியினருக்கு நிலம், பட்டா வழங்ககோரி, கொல்லிமலை தாலுகா அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொல்லிமலையில் சேளூர்நாடு, பைல்நாடு, வாழவந்திநாடு, அரியூர்நாடு உள்ளிட்ட 14 பஞ்சாயத்துகளில் லட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கொல்லிமலை வனத்தில் உள்ள நிலங்களில் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2006ம் ஆண்டு சட்டப்படி, வன நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி, தமிழ்நாடு பழங்குடியினர் மக்கள் நல முன்னேற்ற சங்கம் சார்பில், நேற்று செம்மேடு தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் பார்த்திபன் தலைமை தாங்கினார். கௌரவ தலைவர் தங்கராஜ், செயலாளர் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், 2006ம் ஆண்டு சட்டப்படி வன நிலங்களை சார்ந்து வாழ்பவர்களுக்கு 10 ஏக்கர் நிலமும், நிலமில்லாமல் வன நிலங்களில் வாழ்பவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் மற்றும் அதற்கான பட்டா வழங்கக் கோரியும், கிராம நிர்வாக அலுவலர்கள் அந்தந்த கிராமங்களிலேயே தங்கி பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாநில துணை செயலாளர் லதா, மாவட்ட தலைவர் சின்னுசாமி, செயலாளர் ஜெயபால், பொருளாளர் கார்த்தி, நிர்வாகிகள் காளி, அருண்குமார், ராமசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.