கிருஷ்ணகிரி, பிப்.8: கிருஷ்ணகிரியில் நடைபெற்ற கல்வி மாவட்ட அளவிலான உலகத் திறனாய்வு தடகளப் போட்டியில் 849 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டரங்கில், கல்வி மாவட்ட அளவிலான உலகத்திறனாய்வு தடகளப் போட்டிகள் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் 100 மீ., 200 மீ., 400 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் 6ம் வகுப்பு மாணவ, மாணவியர் 305 பேரும், 7ம் வகுப்பு மாணவ, மாணவியர் 296 பேரும், 8ம் வகுப்பு மாணவ, மாணவியர் 248 பேரும் என மொத்தம் 849 பேர் பங்கேற்று விளையாடினர். இதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், முதல் இடம் பெற்றவர்கள் நாமக்கல், கரூர், சேலம், சங்ககிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் ஆகிய 7 கல்வி மாவட்டங்களுக்கிடையே நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனர். இதில் தடகள பயிற்சியாளர் சந்திரகுமார், கால்பந்து பயிற்சியாளர் அப்துல்ஆஷா, டேக்வோண்டா பயிற்சியாளர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.