×

ஐ.எப்.எஸ் தேர்வு அறந்தாங்கி மாணவர் தமிழக அளவில் 7வது இடம்

அறந்தாங்கி, பிப். 8: ஐஎப்எஸ் தேர்வில் அறந்தாங்கி மாணவர் தமிழக அளவில் 7வது இடம் பிடித்துள்ளார்.
அகில இந்திய அளவில் 89 ஐஎப்எஸ் அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் அறந்தாங்கி மாணவன் விவேக், அகில இந்திய அளவில் 65வது இடத்தையும், தமிழக அளவில் 7வது இடத்தையும் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். தமிழகத்தில் இருந்து தேர்வு எழுதியவர்களில் விவேக்குடன் சேர்த்து மொத்தம் 14 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுகுறித்து மாணவர் விவேக் கூறியதாவது: எனது சொந்த ஊர் அறந்தாங்கி அருகே உள்ள காரக்கோட்டையாகும். எனது தந்தை பழனி, மீமிசலில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். அம்மா வைஜெயந்தி குடும்பத்தை கவனித்து வருகிறார். எனது சகோதரியும், நானும் படிப்பில் ஏதாவது சாதிக்க வேண்டுமென நன்றாக படித்து வந்தோம். சமீபத்தில் தான் சகோதரிக்கு வேளாண்மை பொறியியல் துறையில் பணி கிடைத்தது. நான் அறந்தாங்கி, புதுக்கோட்டையில் உள்ள தனியார் பள்ளிகளில் 12ம் வகுப்பு வரை படித்து விட்டு திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் பிஇ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தேன். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 10ம் தேதி நடந்த ஐஎப்எஸ் தேர்வில் பங்கேற்று தேர்வெழுதினேன். தொடர்ந்து கடந்த மாதம் 28ம் தேதி டெல்லியில் நடந்த நேர்முக தேர்வில் கலந்து கொண்டேன். அங்கு கேட்ட கேள்விகளுக்கு நல்ல முறையில் பதில் கூறினேன். இந்நிலையில் தற்போது வந்துள்ள ஐஎப்எஸ் தேர்வில் நான் அகில இந்திய அளவில் 65வது இடத்தையும், தமிழக அளவில் 7வது இடத்தையும் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளேன். நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்பதால் எனக்கு வனப்பணி பிடித்திருந்தது. அதனால் தீவிரமாக படித்து ஐஎப்எஸ்சில் தேர்ச்சி பெற்றுள்ளேன். எனக்கு எந்த ஊரில் பணி ஒதுக்கினாலும் அவற்றை திறம்பட செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : examination ,IFS ,student ,Aranthangi ,Tamil Nadu ,
× RELATED நீட் அடிப்படை பயிற்சி தேர்வு...