திருத்துறைப்பூண்டி, பிப்.8: திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ராயநல்லூர் பகுதியில் நெடுஞ்சாலையோரத்தில் சத்திரகுளம் உள்ளது. இந்த குளத்தில் அந்த பகுதியிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், சாலை வழியாக செல்பவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த குளத்தை தூர்வாரி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது குளத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு வெங்காய தாமரை உள்ளிட்ட பல்வேறு செடி.கொடிகள் மண்டிக்கிடக்கிறது. மேலும் குளத்தின் ஒரு புறத்திலுள்ள படித்துறை சேதமடைந்து பல ஆண்டுகளாக சீரமைக்காமல் அப்படியே உள்ளது.இது குறித்து பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ராயநல்லூர் கோட்டகம் பகுதியில் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் கஜா புயலில் சாய்ந்த டிரான்ஸ்பார்ம் தற்போது பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. சாய்ந்த டிரான்ஸ்பார்மர் எந்த நேரத்திலும் விழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நலன்கருதி சாய்ந்து பயன்பாட்டில் இல்லாமல் உள்ள டிரான்ஸ்பார்மரை அப்புறப்படுத்திட வேண்டுமென்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.