நாகை, பிப்.8: இந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழகம் மாவட்ட செயற்குழு கூட்டம் நாகூரில நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகூர் நகர அமைப்பாளர் ஜின்னா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெய்னுலாப்தீன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் மாநில தலைவர் தமீம்அன்சாரி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த காதர்ஒலி, பாருக்ஜாகிர்உசேன், இந்திய சிறுபான்மை பாதுகாப்பு கழக மாவட்ட பொருளாளர் மன்சூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வடமாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருவதையடுத்து ரயில்வே நிர்வாகம் 14 நாட்களுக்கு சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும், நடமாடும் மருத்துவ முகாம் அமைத்து தர வேண்டும், நாகூர் தர்காவிற்கு வரும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும், எரியாமல் உள்ள தெரு விளக்குகளை நாகை நகராட்சி நிர்வாகம் சீரமைத்து எரிய விட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.