திருவண்ணாமலை, பிப்.8: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே புதியதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று, பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள ராமசாமி நகரில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டு, கடந்த 3 நாட்களாக செயல்பட்டு வருகிறது. இந்த டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நேற்று, ராமசாமி நகர், வடஆண்டாப்பட்டு, துர்க்கை நம்மியந்தல், சேரியந்தல், செல்வபுரம், சடையனோடை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் மற்றும் கிழக்கு காவல் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி மற்றும் வருவாய்த்துறையினர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். அதைத்தொடர்ந்து, டாஸ்மாக் கடையை மூடியதும், முற்றுகையை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.இந்த முற்றுகை போராட்டத்திற்காக பொதுமக்கள் வேன்களில் அழைத்து வரப்பட்டு இருந்தனர். இந்த வேன்களை போலீசார் செல்போனில் படம் பிடித்தனர். இதுகுறித்து போலீசாரிடம் கேட்டதற்கு `முற்றுகை போராட்டத்துக்கு வேன்களில் அழைத்து வந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது. அதற்காகத்தான் செல்போனில் படம் பிடித்தோம்'' என்றனர்.