மண்ணச்சநல்லூர், பிப்.7: மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் ஊராட்சி பகுதியில் பஸ் நிலையம் அருகே இடிக்கப்பட்ட பொது கழிப்பறை பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் கட்டப்படாமல் இருப்பதால் பயணிகளும் பொதுமக்களும் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார்கோவில் ஊராட்சியில் கொள்ளிடம் டோல்கேட் பஸ்நிலையம் அருகே பொதுசுகாதார கழிப்பிடம் பயன்பாட்டில் இருந்த அந்த கழிப்பறை கட்டிடம் சேதமடைந்ததால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இடித்து அகற்றப்பட்டது. ஆனால் இதுவரை புதிதாக கழிப்பறை கட்டப்படவில்லை. அரியலூர், பெரம்பலூர் போன்ற முக்கியமான வழித்தடங்களில் செல்வதற்கு கொள்ளிடம் டோல்கேட் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் ஏறி செல்ல வேண்டும். மேலும் சென்னை, சிதம்பரம், நாமக்கல் உள்பட நெடுந்தொலைவில் இருந்து திருச்சிக்கு வரும் பயணிகள் திருச்சி புறநகர் பகுதிக்கு செல்ல வேண்டுமானால் கொள்ளிடம் டோல்கேட் பகுதியில் இறங்கி செல்வார்கள். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்ல முக்கிய நிறுத்தமாகவும் கொள்ளிடம் டோல்கேட் பஸ் நிலையம் இருந்து வருகிறது. இரவு பகலாக இந்த பகுதியில் பயணிகளின் வரத்து அதிக அளவில் இருக்கும். இந்நிலையில் கழிப்பறை வசதி இல்லாததால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இது குறித்து உரிய அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மீண்டும் இந்த இடத்தில் பொதுசுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்பதே பயணிகள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாகும்.
இதுகுறித்து பிச்சாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் கூறும்போது,
கொள்ளிடம் டோல்கேட் பஸ்நிலைய பகுதியில் இருந்த பொதுசுகாதார வளாகம் இந்த ஊர் பொதுமக்களுக்கு மட்டுமின்றி ஆயிரக்கணக்கான வெளியூர் பயணிகளுக்கும் பெரிதும் உபயோகமாக இருந்தது. ஆனால் தற்போது சுகாதார வளாகம் இல்லாமல் பொதுமக்களும் பயணிகளும் பெரிதும் அவதிப்படுகின்றனர். இந்த இடத்தில் சுகாதார வளாகம் அமைக்க கோரிக்கை விடுத்து 6 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் தொடர்ச்சியாக 3 கலெக்டர்களிடம் கோரிக்கை வைத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இனிமேலாவது உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு கழிப்பறை கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றார்.