மதுரை, பிப். 7:பிறவியிலேயே காதுகேளாத குழந்தைகளுக்கு, மதுரை அரசு மருத்துவமனையில், காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நவீன காதொலி கருவி இலவசமாக பொருத்தப்படுகிறது. மதுரை அரசு மருத்துவமனையில் பிறவியிலேயே முற்றிலும் காது கேளாத, 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் `காக்ளியர் இம்ப்ளான்ட்’ (நுண் செவி கருவி) என்ற நவீன கருவி இலவசமாக பொருத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன், சென்னை, காது மூக்கு ெதாண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் மேற்பார்வையில், மதுரை அரசு மருத்துவமனை, காது, மூக்கு தொண்டை அறுவை சிசிச்சை, துறை தலைவர் டாக்டர் தினகரன் தலைமையிலான மருத்துவக்குழு 100வது குழந்தைக்கு இந்த நவீன கருவியை பொருத்தினர். இதையொட்டி, மருத்துவ கல்வி கருத்தரங்கம் மருத்துவக்கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடந்தது. இதில் மருத்துவக்கல்வி இயக்குனர் எட்வின்ஜோ தலைமை வகித்தார். முன்னாள் டீன்கள் ரேவதி, மருதுபாண்டியன், சண்முகசுந்தரம், மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா, மருத்துவக்கல்லூரி துணை முதல்வர் தனலெட்சுமி மற்றும் துறை மருத்துவர்களும், அறுவை சிகிச்சை செய்துகொண்ட குழந்தைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். டாக்டர் தினகரன் கூறுகையில், ``இதுவரை 100 குழந்தைக்கு இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது. வெளியில் இக்கருவி பொருத்துவதற்கு, ரூ.6.35 லட்சம் வரை செலவாகும், மதுரை அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்டத்தின் கீழ், இக்கருவி இலவசமாக, பொருத்தப்படுகிறது. 6வயதிற்கு உட்பட்ட பிறவியிலேயே காதுகேளாத குழந்தைகளின் பெற்றோர் இதை பயன்படுத்திக்கொள்ளலாம்’’ என்றார்.