×

முத்துநாயக்கன்பட்டியில் மதுக்கடை 40 நாளுக்குள் இடமாற்றம் செய்யப்படும்

ஓமலூர், பிப்.7: ஓமலூர் அருகே டாஸ்மாக் கடை 40 நாட்களுக்குள் வேறு இடத்திற்கு மாற்றப்படும் என மேட்டூர் கோட்டாட்சியர் உறுதி அளித்தார். ஓமலூர் அருகே முத்துநாயக்கன்பட்டி கிராமத்தில், அங்காளம்மன் நகரில் கடந்த 10 ஆண்டுகளாக டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது அருந்தும் குடிமகன்கள், இவ்வழியாக செல்லும் பெண்கள் மற்றும் மாணவிகளை கேலி, கிண்டல் செய்வதும், தங்களுக்குள் தகராறு செய்வதும் வாடிக்கையாக உள்ளது. இதையடுத்து, கடந்த வாரம் இந்த கடையை குழந்தைகளுடன் முற்றுகையிட்டு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, ஓமலூர் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. மேட்டூர் கோட்டாட்சியர் லலிதா தலைமையில் நடந்தகூட்டத்தில், டாஸ்மாக் உதவி மேலாளர் கண்ணன், மேற்கு கிடங்கு மேலாளர் முகம்மது குதரதுல்லா, ஓமலூர் தாசில்தார் குமரன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், டாஸ்மாக் கடையால் தங்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறித்து பெண்கள் எடுத்துரைத்தனர். இதையடுத்து, இன்னும் 40 நாட்களுக்குள் அந்த டாஸ்மாக் கடை வேறு இடத்திற்கு மாற்றப்படும் எனவும்,  அதுவரை அந்த பகுதியில் பிரச்னைகள் ஏதும் ஏற்படாத வண்ணம், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் கோட்டாட்சியர் லலிதா உறுதியளித்தார். அவருக்கு கிராம பெண்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : bartender ,Muthunakkenkuppatti ,
× RELATED காரைக்காலில் பயங்கரம் தனியார் மதுக்கடை காவலாளி அடித்து கொலை