சுசீந்திரம், பிப்.7 : சுசீந்திரம் அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பிளஸ் 2 மாணவி, கட்டிட தொழிலாளி ஆகியோர் அடுத்தடுத்து விஷம் குடித்து தற்கொலை செய்தனர்.சுசீந்திரம் அருகே உள்ள வழுக்கம்பாறை மணவிளை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். சிற்ப வேலை செய்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவியும், ஆனந்தி (17) என்ற மகளும், அஜித் (16) என்ற மகனும் உண்டு. இதில் ஆனந்தி, சுசீந்திரத்தில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர்களின் உறவினர் பெரியசாமி (45). இவரும், மணவிளை பகுதியில் வசித்து வருகிறார். இவரது மகன் அஜித் (20). 9ம் வகுப்பு வரை படித்து விட்டு, கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.
கடந்த 1 வருடமாக ஆனந்தியும், உறவினர் அஜித்தும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிய வந்ததும், பூதாகரமாக வெடித்தது. ஆனந்தியின் வீட்டில் அவரை கடுமையாக கண்டித்தனர். காதல் விவகாரம் வெளியானதில் இருந்து ஆனந்தியை அவரது பெற்றோர் தீவிரமாக கண்காணிக்க தொடங்கினர். இந்த நிலையில் நேற்று முன் தினம் மாலையில் ஆனந்தி நீண்ட நேரம் செல்போனில் பேசி உள்ளார். இதை பார்த்து அவரது தாய் விசாரித்த போது, அஜித்துடன் பேசியது தெரிய வந்தது. இதனால் மகளை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து ஆனந்தி தனது காதலன் அஜித்திடம் கூறி, எனது வீட்டில் காதலை ஏற்றுக் கொள்ள வில்லை. எனக்கு வாழ பிடிக்க வில்லை. நீ என்னை மறந்து விடு என கூறி இருக்கிறார். அப்போது அஜித், உன்னை மறந்து விட்டு நான் மட்டும் வாழ்ந்து என்ன செய்ய போகிறேன். இருவரும் சேர்ந்தே இறந்து போவோம் என கூறி உள்ளார். பின்னர் அரளி விதை, கொசுவர்த்தி, நல்லெண்ணெய் ஆகியவற்றை கலந்து தனது வீட்டில் உள்ள மிக்சியில் அரைத்த அஜித், அதை ஆனந்தியின் வீட்டுக்கு சென்று அவரிடம் கொடுத்து விட்டு, தானும் குடித்துள்ளார்.இதை குடித்த சிறிது நேரத்தில் ஆனந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கினார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் ஆனந்தி பரிதாபமாக இறந்தார். இதற்கிடையே காதலன் அஜித், வழுக்கம்பாறை செங்கட்டி பாலம் சுடுகாடு அருகே மயங்கிய நிலையில் கிடந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு மருங்கூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மயிலாடியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே அஜித் இறந்தார். இதையடுத்து அவரது உடலும் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவங்கள் குறித்து இருவரின் தந்தையும், தனித்தனியாக சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. காதலுக்கு எதிர்ப்பு இருந்ததால் இருவரும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மரணத்திலும் ஒன்று சேர முடியாத ஜோடி அஜித்தின் தந்தை பெரியசாமி கூறுகையில், ஆனந்தியை காதலிப்பதாக என்னிடம் கூறினான். முதலில் நான் அவனை கண்டித்தேன். பின்னர் அவன் பிடிவாதமாக இருந்ததால், ஆனந்திக்கு இப்போது தான் 17 வயது ஆகிறது. 18 வயது ஆனதும் , எப்படியாவது திருமணம் செய்து வைக்கிறேன் என்றேன். நேற்று காலையில் இருந்தே வேலைக்கு செல்லாமல் அங்கும், இங்கும் போனை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டு இருந்தான். திடீரென மிக்சியில் ஏதோ வைத்து அரைத்தான். நானும் அதை கவனிக்க வில்லை. விஷத்தை தான் அரைத்து குடித்துள்ளான் என்பது இப்போது தான் தெரியும் என்றார். ஆனந்தியின் தந்தை சிவக்குமார் கூறுகையில், நாங்கள் மிகவும் ஏழ்ைம குடும்பத்தை சேர்ந்தவர்கள். கல் சிற்ப வேலை செய்கிறேன். படிக்கிற வயதில் காதல் தேவையா? என கண்டித்தோம். ஒழுங்காக படித்தால் தான் நன்றாக இருக்க முடியும். கஷ்டப்பட்டு உன்னை படிக்க வைக்கிறோம். நீ தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்றேன். ஆனால் இப்படி செய்வாள் என எண்ண வில்லை என கூறி கதறி அழுதார். ஆனந்தி ஏதாவது கடிதம் எழுதி வைத்து உள்ளாரா? என சோதனை செய்தனர். ஆனால் அப்படி கடிதம் எதுவும் இல்லை என போலீசார் கூறினர். ஆனந்தி மாலை 5.45 மணியளவில் உயிரிழந்தார். அஜித் மாலை 6 மணிக்கு உயிரிழந்தார். சேர்ந்து வாழ முடியாதது மட்டுமல்ல, சாவிலும் இருவரும் தனித்தனியாக பிரிந்து விட்டனர் என உறவினர்கள் சோகத்துடன் கூறினர்.