காஞ்சிபுரம்: கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கட்டிடத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், கலெக்டர் பொன்னையா நலத்திட்ட உதவிகள் வழங்கினார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் பொன்னையா தலைமை தாங்கினார். இதில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து, மடுவில் சிக்கி இறந்த செங்கல்பட்டு வட்டம், கொளத்தாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவரது மனைவி நித்யாவிடம் 1 லட்சம், பெரும்புதூர் வட்டம் நல்லூர் கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கோவிந்தன் மனைவி செல்வியிடம் 50 ஆயிரத்தை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து, கடந்த ஆண்டு கொடிநாள் வசூலில் மாநில அளவில் காஞ்சிபுரம் மாவட்டம் முதலிடம் பெற்றதுபோல், இந்த ஆண்டும் கொடிநாள் வசூலில் சாதனை புரிய அனைத்து அலுவலர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டார். இதனையொட்டி குன்றத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன் 7 லட்சத்திற்கான கொடிநாள் நிதியை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார். உதவி ஆணையர் (கலால்) அமிதுல்லா, தனித்துணை ஆட்சியர் சந்திரசேகர், தனித்துணை ஆட்சியர் (ஆதிதிராவிட நலத்துறை) தனலட்சுமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.