தா.பேட்டை, பிப்.6: முசிறி ஒன்றியம் திருத்தியமலை, தண்டலைப்புத்தூர், காமாட்சிப்பட்டி, வெள்ளூர், மாங்கரைப்பேட்டையில் திமுக ஊராட்சி சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், தொகுதி பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். பொதுமக்கள் குடிநீர் பிரச்னையை தீர்த்து வைக்குமாறும், விவசாயத்திற்கு உதவிடும் வகையில் வாய்க்கால்களை தூர்வாரவும், கோரை விளைச்சலுக்கு காவிரி நீரை வழங்கிடவும் வலியுறுத்தினர். மேலும் அரசு சார்பில் கோரைபாய் தொழிற்சாலை அமைத்திடவும் காவிரியாற்றில் நிரந்தர கொரம்பு அமைக்கவும், மாங்கரைப்பேட்டையில் பகுதி நேர ரேஷன் கடையை முழு நேர ரேஷன் கடையாக அமைக்கவும், திருத்தியமலை ஏரிக்கு உபரியாக வரும் மழைநீரை சேகரிப்பு செய்ய வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி பேசினர். கூட்டத்தில் பதிலளித்து பேசிய முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, தற்போது ஆட்சியில் உள்ளவர்களுக்கு கொரம்பு என்ன என்று தெரியாது. உள்ளாட்சி அமைப்புகள் இல்லாத காரணத்தால் மக்களின் அடிப்படை பிரச்னைகள் களையப்படாமல் உள்ளது.
இதற்கான ஒரே தீர்வாக உள்ளாட்சி தேர்தலை உடன் நடத்த வேண்டும் என அனைவரும் வலியுறுத்தி வருகிறோம். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அப்போது ஏழை மக்களின் கண்ணீர் துடைக்கப்படும். பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கைகள் ஸ்டாலின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அந்தந்த கலெக்டர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.