திருச்சி, பிப்.6: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் மற்றும் முன்னாள் படைவீரர்களுக்கான சுய வேலைவாய்ப்பு கருத்தரங்கு கூட்டம் நடந்தது.
டிஆர்ஓ சாந்தி தலைமை வகித்தார். இதில் கலந்துகொண்ட முன்னாள் படைவீரர்களிடம் டிஆர்ஓ சாந்தி குறைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 38 ேபருக்கு ரூ.7.50 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பல்வேறு கோரிக்கைகள் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டதற்கு கலெக்டருக்கு முன்னாள் படைவீரர்கள் நன்றி தெரிவித்தனர். முன்னாள் படைவீரர்களிடம் இருந்து 55 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உடனடியாக தீர்வுகாண டிஆர்ஓ அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து முன்னாள் படைவீரர்களுக்கான சுயவேலைவாய்ப்பு கருத்தரங்கு நடத்தப்பட்டது. மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், மாவட்ட தொழில் முதலீட்டுக்கழக மேலாளர், மாவட்ட மேலாளர் தாட்கோ, நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் லெப்.கர்னல் ஞானசேகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.