ராமநாதபுரம், பிப்.3: டி.கருங்குளம் கிராமத்தில் பூட்டி கிடக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தால், கிராம மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சத்திரக்குடி அருகே டி.கருங்குளம் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆரம்ப காலத்தில் திருவாடி, இலந்தைகுளம் உட்பட சுற்றுப்புற கிராம பகுதிகளிலிருந்து ஏராளமான நோயாளிகள் தினமும் சிகிச்சைக்காக வந்தனர். தற்போது சுகாதார நிலையம் பராமரிப்பு இல்லாமல் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக அடைத்தே கிடக்கிறது. இதனால் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த கிராமமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். சுகாதார நிலையம் பல இடங்களில் உடைந்து நிலையில் உள்ளது. மாவட்ட நிர்வாகத்தினர் அடைத்து கிடக்கும் சுகாதார நிலையத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். அப்பகுதியை சேர்ந்த செல்வி கூறுகையில், சுகாதார நிலைய கட்டிடத்தை பணியாளர்கள் முறையாக பராமரிப்பது கிடையாது. டாக்டர் இல்லாததால் கிராம மக்கள் அனைவரும் அவசர தேவைகளுக்கும் தனியார் வாகனங்கள் மூலம் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. மருத்துவ அதிகாரிகள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.