விருதுநகர், பிப். 5: கோட்டையூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில், அடகு வைத்த நகைகளை, தனியார் வங்கியில் அடகு வைத்துள்ளதாக மதிப்பீட்டாளர் மீது புகார் குவிகிறது.
விருதுநகர் அருகே, கோட்டையூரில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கோட்டையூர், புதுப்பட்டி, காளப்பெருமாள்பட்டி, அப்பையநாயக்கன்பட்டி, கோபாலபுரம், கூத்திப்பாறை, ஆவடையாபுரம், சூலக்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். வங்கி நகை மதிப்பீட்டாளர் நந்தகுமார், நகைகளை அடகு வைத்தவர்களுக்கு அட்டைகளை வழங்கியுள்ளார். இதனிடையே, கடந்த 2016 முதல் 2017 வரை அடகு நகைகள் வங்கியில் இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால், நகைகளை சாத்தூர் தனியார் வங்கியில் அடகு வைத்து மோசடி செய்ததாக கூறப்படுகிறது. நகை அடகு வைத்தவர்கள் முழு தொகையை மதிப்பீட்டாளரிடம் கொடுத்தும், அதற்கான ரசீது மற்றும் நகைகளை திருப்பி தரப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்த கோட்டையூர் சுப்புலட்சுமி கூறுகையில், ‘2017ல் 25 பவுன் நகையை ரூ.2.20 லட்சத்திற்கு அடகு வைத்தேன். இதில், ரூ.1.50 லட்சம் கட்டினேன். இதற்கான ரசீது வழங்கவில்லை.
வீரார்பட்டி செல்லையா கூறுகையில், ‘7 பவுன் நகையை அடகு வைத்து ரூ.50 பணம் வாங்கினேன். பணத்தை முழுமையாக செலுத்தியும், இதுவரை நகை வழங்கவில்லை.
வீரார்பட்டி ராதிகா கூறுகையில், ‘3 பவுன் நகையை அடகு வைத்து ரூ.20 ஆயிரம் வங்கினேன். அந்த நகையை எந்த வங்கியில் அடகு வைத்திருக்கிறார்கள் என தெரியவில்லை.
வீரார்பட்டி ஆவடைத்தாய் கூறுகையில், ‘4 பவுன் நகையை வைத்து ரூ.40 ஆயிரம் வாங்கினேன். பணம் முழுமையாக திருப்பி செலுத்தியும், இன்னும் நகை தரவில்லை.