திருப்போரூர், பிப். 5: திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கத்தில் அரசு இருபாலர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக இருக்கும்போது கடந்த 2010ம் ஆண்டு கேளம்பாக்கம் ஊராட்சி மன்றத்தில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்றும், ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கும் தனித்தனியாக மேல்நிலைப்பள்ளி அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து, கடந்த 2010ம் ஆண்டு மே மாதத்தில் கேளம்பாக்கத்தில் செயல்படும் அருள்மிகு செல்வ விநாயகர் கோயில் அறக்கட்டளை சார்பில் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளிக்கு 2 ஏக்கர் நிலம் தானமாக வழங்கிபத்திரப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, மகளிர் உயர்நிலைப்பள்ளி தனியாக தொடங்க அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. இதற்கிடையில், உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகிறது. ஆனால், 4 வருடங்கள் கழித்து 2.12.2014ம் தேதியில் புதிய மகளிர் உயர்நிலைப்பள்ளி தொடங்க அரசாணை (எண் 199) பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டவுடன், அப்போதைய பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் ₹3 லட்சம், மக்கள் பங்களிப்பு தொகையாக கலெக்டரிடம் கேட்புக் காசோலை மூலம் வழங்கப்பட்டது.
மேலும், 2015ம் ஆண்டில் பள்ளிக்கென தானமாக வழங்கப்பட்ட இடத்தை சுற்றி வேலி அமைக்கப்பட்டு, கேளம்பாக்கம் ஊராட்சி மன்றம் சார்பில் நுழைவாயில் அமைக்கப்பட்டது. நுழைவாயில் அமைக்கப்பட்ட. து ஆனால், பள்ளிக்கான கட்டிடங்கள் கட்ட எ்விவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒரே வளாகத்தில் செயல்படுகிறது.தற்போது பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 430 மாணவிகள் படிக்கின்றனர். இங்குள்ள வளாகம் மாணவிகளின் பாதுகாப்புக் ஏற்றதாக இல்லை என பெற்றோர்கள் கருதுகின்றனர். எனவே, அரசு ஆணை பிறப்பித்து 4 ஆண்டுகள் முடிந்த நிலையில் பொதுமக்கள் தங்களின் பங்குத்தொகையை செலுத்தி, இடம் தானமாக வழங்கியும் இதுவரை அரசு சார்பில், புதிய மகளிர் மேல்நிலைப்பள்ளி தொடங்குவதில் அக்கறை காட்டவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.எனவே, வரும் கல்வியாண்டில் புதிய வளாகத்தில் மகளிர் மேல்நிலைப்பள்ளியை இடம் மாற்றும் வகையில் புதிய கட்டிடங்களை கட்ட நிதி ஒதுக்க வேண்டுமென கேளம்பாக்கம், படூர், புதுப்பாக்கம் கிராம பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.