திருத்துறைப்பூண்டி, பிப்.2: திருத்துறைப்பூண்டியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்துறைப்பூண்டி பகுதியில் 2017-18க்கான பயிர் காப்பீட்டு தொகையை உடன் வழங்க வேண்டும். அறுவடை ஆகும் தருவாயில் நீரில் மூழ்கி அழிந்த நெல் விவசாயத்திற்கு மட்டுமல்லாது புயலால் பதராகி மகசூல் இழந்துள்ள விவசாய நிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
கணக்கெடுப்பில் விடுபட்ட தென்னை மரங்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும். தோட்டக்கலை பயிர்களுக்கும் உரிய அளவு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் சங்கம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகரம் சார்பில் திருத்துறைப்பூண்டி கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏ உலகநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஜோசப், ஒன்றிய தலைவர் பாலு, ஒன்றிய செயலாளர் ஜெயபால், நகர செயலாளர் சுந்தர், நகரதலைவர் பக்கிரிசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.