×

தஞ்சை, திருவிடைமருதூரில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பரிதாப பலி

தஞ்சை,பிப்.2:  தஞ்சை மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாகினர். தஞ்சை கீழவாசல் தைக்கால் பகுதியை சேர்ந்தவர் நசீர் (58). இவர் நேற்று முன்தினம்  இரவு தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ரயிலடி நோக்கி பைக்கில் சென்றார். அப்போது பின்னால் வந்த அரசு பேருந்து, பைக் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி நசீர் இறந்தார். பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த அவரது நண்பர் கீழே குதித்து காயமின்றி தப்பினார். இதுகுறித்து தஞ்சை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திருவிடைமருதூர்: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தாலுகா தென்னவன்நல்லூரை சேர்ந்தவர் ரமேஷ் (38). இவர் திருவிடைமருதூர் அடுத்த அம்மாசத்திரம் கிராமத்தில் தங்கியிருந்து பாத்திரங்களுக்கு ஈயம் பூசும் வேலையை செய்து வந்தார். இந்நிலையில் ரமேஷ் மகள் தர்ஷினி (7) நேற்று முன்தினம் காலை அம்மாசத்திரம் மெயின் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த கார், சிறுமி மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தர்ஷினி இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளி தற்கொலை: கும்பகோணம் அருகே உள்ள அம்மன்பேட்டை மேலத்தெருவை சேர்ந்தவர் (35) சலவை தொழிலாளி. இவரது மனைவி மலர்விழி (27). ராகவனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் வேலைக்கு சென்று வாங்கிய சம்பளத்தை கொடுக்காததால் நேற்று முன்தினம் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ராகவன், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து மலர்விழி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : accidents ,Thiruvidimarudur ,Tanjore ,
× RELATED திருக்கோவிலூர் அருகே இருவேறு...