கொள்ளிடம், பிப்.2: கள்ளச்சாராய விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த கணவர் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், மேலும் வழக்கு போடப் போவதாகவும் போலீசார் மிரட்டி வருவதாக மனைவி நாகை எஸ்.பி.யிடம் புகார்அளித்துள்ளார்.கொள்ளிடம் அருகே வேட்டங்குடி கிராமம் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சித் தலைவர் பத்மாவில்வநாதன்(35). இவர் மாவட்ட எஸ்.பி., விஜயகுமாருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், கள்ளச்சாராய விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்த என் கணவர் வில்வநாதன் மீது கடந்த 17ம் தேதி புதுப்பட்டினம் காவல்நிலையத்தில் பொய்வழக்கு போட்டு 3 பிரிவுகளின் கீழ் பொய் வழக்குப்பதிந்து கைது செய்து பொறையார் கிளைச் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து ஊர் பொதுமக்கள் சார்பில் தெரிவித்தும் போலீசார் அதனைப் பொருட்படுத்தவில்லை. கள்ளச்சாராயம் தொடர்ந்து வேட்டங்குடியில் விற்கப்பட்டு வந்த நிலையில் தாசில்தாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டதை தொடர்ந்து இது குறித்து மீண்டும் புகார் தெரிவிக்கப்பட்டதால், கோபமடைந்த புதுப்பட்டினம் போலீசார் எனது கணவர் வில்வநாதனை சாராய வியாபாரியிடமே பொய் புகாரை பெற்று கைது செய்தனர். பின்னர் 8 நாள் சிறைத்தண்டனைக்கு பிறகு நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த எனது கணவர் 15 நாட்களுக்கு புதுப்பட்டினம் காவல் நிலையத்தில் தினந்தோறும் காலை 10 மணிக்கு கையெழுத்திட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளார். சமூகத்தில் உயர்ந்த நிலையில் அந்தஸ்துடன் வாழ்ந்து வரும் எங்கள் குடும்பத்திற்கு புதுப்பட்டினம் போலீசார் களங்கம் ஏற்படுத்திவிட்டனர். மேலும் எனது கணவர் மீது பொய் வழக்கு போடுவதாக எனக்கு மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
எனவே இது குறித்து விசாரணை செய்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இப்புகார் மனுவின் நகல்களை முதலமைச்சரின் தனிப்பிரிவு, தஞ்சை சரக டிஐஜி, மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளதாக பத்மாவதி வில்வநாதன் தெரிவித்தார்.