புதுச்சேரி, பிப். 2: புதுச்சேரியில் அரசு நிதிஉதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், தங்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தக் கோரியும், 4 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும், பல ஆண்டுகளாக பணிபுரிபவர்களை நிரந்தரம் செய்யக் கோரியும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, நேற்று மாலை பள்ளிக்கல்வித்துறை எதிரே தர்ணா போராட்டம் நடத்தினர். கூட்டமைப்பு துணை தலைவர் ஆல்பர்ட் மார்ட்டின் தலைமை தாங்கினார். துணை தலைவர் அந்தோணிசாமி முன்னிலை வகித்தார். தலைவர் ராஜேந்திரன் வரவேற்றார். செயலாளர் மார்ட்டின் கென்னடி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். அரசு ஊழியர் கூட்டமைப்பு கவுரவ தலைவர் சேஷாசலம் சிறப்புரையாற்றினார். ஓய்வூதியதாரர்கள் சங்க தலைவர் ஸ்டாலின், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆலோசகர் பரிமளரங்கன், தலைவர் பாலகுமார், பொதுச்
செயலாளர் சம்பந்தம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். சவரிமுத்துராயன் நன்றி கூறினார். இதில் அரசு நிதிஉதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள், பென்ஷன்தாரர்கள் கலந்து கொண்டனர்.