×

வாறுகால் வசதியின்றி தெருக்களில் ஓடும் கழிவுநீர் காரியாபட்டியில் சுகாதாரக்கேடு

காரியாபட்டி, பிப். 2: காரியாபட்டியில் போதிய வாறுகாலின்றி, தெருக்களில் கழிவுநீர் தேங்குகிறது. இதனால், பொதுமக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. காரியாபட்டி பேரூராட்சியில் உள்ள பல தெருக்களில் கழிவுநீர் செல்ல முறையான வாறுகால் வசதியில்லை. இதனால், பல ஆண்டுகளாக தெருக்களில் கழிவுநீர் ஓடுகிறது. பல தெருக்களில் இருபுறமும் வாறுகால் அமைக்காமல், பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், ஆங்காங்கே சாலைகளில் ஓடுகிறது. இதில், வாகனங்கள் செல்லும்போது, கற்கள் பெயர்ந்து சாலைகளும் சேதமடைகின்றன. இதனால், வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். தெருக்களில் தேங்கும் கழிவுநீரில் கொசுக்கள் உருவாகி, பொதுமக்களுக்கு சுகாதாரக்கேட்டை உருவாக்குகிறது. எனவே, பொதுமக்களின் நலன் கருதி, காரியாபட்டியில் வாறுகால் இல்லாத தெருக்களில், வாறுகால் அமைக்க, பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : streets ,
× RELATED மக்கள் போராட்டம் எதிரொலி:...