ராசிபுரம், பிப்.1: ராசிபுரம் பாவை கல்லூரியில், தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கைப்பந்து போட்டி துவங்கியது.
கல்வி நிறுவனங்களின் தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். இயக்குநர் ராமசாமி வரவேற்றார். விழாவில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழக கூடுதல் பதிவாளர் செல்லதுரை கலந்துகொண்டு போட்டியை துவக்கி வைத்து பேசுகையில், ‘தமிழ்நாடு மட்டுமின்றி, அண்டை மாநிலங்களின் பல்கலைக்கழகங்களில் இருந்து மகளிர் அணியினர் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பாவை கல்வி நிறுவனங்கள், தொடர்ந்து 4 ஆண்டுகளாக ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தக்கவைத்து இருப்பது மட்டுமல்லாமல், மண்டல அளவிலான போட்டியை ஒழுங்கு செய்திருப்பதும் பெருமிதமாக உள்ளது. நீங்கள் ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்று வெற்றி பெற வேண்டும்,’ என்றார்.
நிகழ்ச்சியில் புதுடெல்லி இந்திய பல்கலைக்கழக சங்கங்களின் கவனிப்பாளர் பால்டேவிட் வாழ்த்துரை வழங்கினார். இந்த போட்டியில் 6 மாநிலங்களில் இருந்து 38 பல்கலைக்கழகங்களை சேர்ந்த அணிகள் இடம்பெற்றன. ெதாடக்க விழாவில் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன், அண்ணா பல்கலைக்கழக உடற்கல்வி உதவி இயக்குநர் சுந்தரராஜன், உடற்கல்வி செயலாளர் பாலகணேஷ், பொறியியல் கல்லூரிகளின் முதல்வர்கள், முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். பொறியியல் கல்லூரி முதல்வர் பிரேம்குமார் நன்றி கூறினார்.