×

அன்னூர் புற வழிச்சாலை குறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்க வேண்டும்

கோவை, பிப்.1: கோவை  மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் கலெக்டர்  அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு விவசாய சங்கங்களும்,  விவசாயிகளும் கலந்து கொண்டு தங்கள் குறைகளை முறையிட்டு மனுவாக  அளித்தனர்.இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினர் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது: அன்னூர் நகரில்  போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது என்பதால் கரியாம்பாளையம் பிரிவு  முதல் அன்னூர் மேட்டுப்பாளையம் சாலை வரை புறவழிச்சாலை அமைக்க தமிழக அரசு  முடிவு செய்துள்ளது. ஆனால் இதுகுறித்து அப்பகுதி மக்களிடமோ, விவசாயிகளிடமோ எந்த  கருத்தும் கேட்கவில்லை. ஆனால் புற வழிச்சாலைக்காக விவசாய நிலங்களில் கற்கள் நடப்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகளிடம் கருத்து கேட்கப்பட்ட பின்னர் புற வழிச்சாலை அமைக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.கோவை ஆனைக்கட்டி வனப்பகுதியில் கடந்த 26ம் தேதி சின்னதம்பி என்ற யானை  வனத்துறையினரால் பிடிக்கப்பட்டு பொள்ளாச்சி டாப்சிலிப் வனப்பகுதியில்  விடப்பட்டது. இதனிடையே நேற்று அதிகாலை பொள்ளாச்சி சேத்துமடை வனச்சரகம்  பகுதியில் உள்ள ஊர்களுக்குள் இந்த யானை தெரிவிக்கப்பட்டது. இதுக்குறித்து  விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர்  கந்தசாமி மாவட்ட கலெக்டரிடம் கூறியதாவது: சின்னதம்பி  யானையால் உயிர் சேதங்கள் ஏற்படும் முன் வனத்துறை சார்பாக அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும். இதுவரை வனத்துறையினர் என்ன நடவடிக்கை எடுத்தார்கள் என்பது  குறித்து தெரியப்படுத்த வேண்டும் என தெரிவித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர், பழனிசாமி பேசுகையில்: உயரழுத்த மின் கோபுரங்கள் விளை நிலங்களின் வழியாக உயர் மின் கோபுரங்கள் அமைக்காமல்  மாற்று திட்டத்தை உருவாக்க வேண்டும். விவசாயிகளுக்கு நேரடி பண வரவுத் திட்டம் தெலுங்கானவைப் போல் நாடு முழுவதும் உருவாக்க வேண்டும். விவசாயிகள் விரும்பும் நிறுவனங்கள் மூலம் மானிய விலையில் கருவிகள் பெற அனுமதி அளிக்க வேண்டும், என்றார்.








Tags :
× RELATED அரசு மருத்துவமனையில் தரமான சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும்