திருப்போரூர். பிப். 1. காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கம் பகுதியில் காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் 50 வது கிளை திறப்பு விழா நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். வங்கியின் மேலாண்மை இயக்குனர் ஜெய வரவேற்றார். கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு ரிப்பன் குத்து விளக்கேற்றி புதிய வங்கி கிளையை திறந்து வைத்து பேசினார். பயனாளிகள் வங்கியின் மொபைல் செயலி சேவையையும் துவக்கி வைத்தார். மேலும் 1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் 401 நபர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டது. பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அமைச்சர். அவர் அதில் இந்தியாவிலேயே தமிழகம் பிளாஸ்டிக் ஒழிப்பில் சிறந்து விளங்கும் மாநிலமாக உள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு அடுத்த தலைமுறைக்கு அருமையான திட்டம்.
தமிழகத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் கடன் தொகை குறைந்தபட்சமாக வழங்கி வருகிறோம். பொங்கல் பரிசாக அதிமுக அரசு ரூபாய் 1000 அனைவருக்கும் வழங்கியதை தொடர்ந்து வாக்காளர்கள் அதிமுகவிற்கு மாறிவிட்டனர். இதை பொறுக்க முடியாதவர்கள் இல்லாததையும், பொல்லாததையும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதைப்பற்றி எங்களுக்கு கவலை இல்லை. எப்போது தேர்தல் வந்தாலும் ஈ.பி.எஸ்., ஓ.பி.எஸ். தலைமையில் எதிர்கொண்டு வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.