×

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ₹2.95 கோடியில் டயாலிசிஸ் மையம், சி.டி ஸ்கேன் வசதி: அமைச்சர் திறந்து வைத்தார்

தாம்பரம், பிப். 1: குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் டாயலிசிஸ் சிகிச்சை மையம் மற்றும் சிடி ஸ்கேன் வசதியை சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ₹20 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட ‘டயாலிசிஸ்’ சிகிச்சை மையம் மற்றும் ₹2 கோடியே 75 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட சிடி ஸ்கேன் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:குரோம்பேட்டை, ஈஞ்சம்பாக்கம், பாடியநல்லூரில் விபத்து சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் பெரும்புதூரில் விபத்து அவசர சிகிச்சை மையம் அமைக்கபடவுள்ளது. சென்னைக்கு மைய பகுதிக்கு செல்லும் வழிகளில் புறநகர் பகுதிகளில் மருத்துவவசதிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு எந்தவித கட்டணமும் இன்றி சிடி ஸ்கேன் எடுக்கப்படும். அதற்குரிய ரேடியாலஜிஸ்ட்  மருத்துவரும் நியமிக்கப்பட்டுள்ளார்கள். குரோம்பேட்டை மருத்துவமனையில் விபத்து சிகிச்சை மைய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. 3 மாதத்தில் இந்த பணிகள் நிறைவடையும்.

ஈஞ்சம்பாக்கம், மாமல்லபுரம் பகுதிகளில் விபத்து சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது. பெரும்பதூரில் அடுத்த வாரம் தொடங்கப்படவுள்ளது. விபத்தில் சிக்குபவர்கள் குறித்த நேரத்தில் போதிய சிகிச்சை அளித்து உயிரை  காப்பாற்ற இந்த விபத்து சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகிறது.பிளாஸ்டிக் ஒழிப்பு படிப்படியாக அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு திட்டங்கள்  மூலம் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் 10 லட்சம் பிரசவங்களில் 7 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடக்கிறது. 3 லட்சம் பிரசவங்கள் தான் தனியார் மருத்துவமனைகளில் நடைபெறுகிறது. 7 லட்சம் பிரசவங்கள் ஒரு ஆண்டிற்கு நடைபெறும் ஒரே மாநிலம் தமிழகம் தான். அரசு மருத்துவமனைகளில் தனியார் மருத்துவமனைகளோடு ஒப்பிடாத அளவிற்கு மேம்பட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.அரசு மருத்துவமனைகளில் கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத அளவிற்கு உள்ளாட்சி அமைப்புகளுடன் சேர்ந்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Douglas Devananda ,Dialysis Center ,Government Hospital ,
× RELATED முற்றுகை போராட்டம்