துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் மேடவாக்கம் சாலை எல்காட் அவென்யூவில் தனியார் ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஊழியர்கள் நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஊழியர்கள் கணினிக்கு ஒரு இ-மெயில் வந்திருந்தது. அதில் சையத் இப்ராகிம் என்பவர், ‘‘நாங்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த கட்டிடத்தில் வெடிகுண்டு வைத்திருக்கிறோம். அடுத்த 6 மணி நேரத்தில் இருந்து 7 மணி நேரத்திற்குள் அந்த குண்டு வெடித்து கட்டிடமே தரைமட்டமாக போகிறது. ஊழியர்கள் அனைவரும் வெளியேறி உயிர் பிழைத்து கொள்ளுங்கள்’’ என குறிப்பிட்டு இருந்தது.
இதையடுத்து அந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சென்னை காவல்துறை கமிஷனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே செம்மஞ்சேரி போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஊழியர்களை வெளியேற்றி நிறுவனம் முழுவதும் சோதனை செய்தனர். சுமார் 3 மணி நேர சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அது புரளி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மெயில் அனுப்பிய நபர் யார்? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.