×

ஆவடி, அம்பத்தூர் பகுதியில் வீடு, குடோனில் பதுக்கிய 1 டன் குட்கா பறிமுதல்

ஆவடி, ஜன.31: அம்பத்தூர், திருமுல்லைவாயல் பகுதியில் வீடு, குடோனில் பதுக்கிய 1 டன் எடையுள்ள குட்காவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக மளிகைகடை வியாபாரி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். ஆவடி, அம்பத்தூர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறுவதாக அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு புகார்கள் வந்தன. அவரது உத்தரவின் பேரில் தனிப்படையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரதீப், இளங்கோ ஆகியோர் தலைமையில் போலீசார் மேற்கண்ட பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஆவடி அடுத்த அயப்பாக்கம், பவானி நகர், எம்ஜிஆர் தெருவில் தேன்ராஜ் (36) என்பவரது வீட்டில் குட்கா பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீட்டுக்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினர். அப்போது, அங்கு அட்டைப்பெட்டிகளில் 350கிலோ எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, அவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில்,  அயப்பாக்கம், ஐயப்ப நகரில் தேன்ராஜ், மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர், வீட்டில் குட்காவை பதுக்கி வைத்து தினமும் கடைக்கு எடுத்து சென்று விற்பனை செய்து வருகிறார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார், தேன்ராஜை பிடித்து  திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர், புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பெரியதுரை  வழக்குப்பதிவு செய்து மளிகை கடை வியாபாரி தேன்ராஜை கைது செய்தார். இதன் பிறகு, அவரை அம்பத்தூர் கோர்ட்டில் நேற்று மதியம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார். மேலும்,  அம்பத்தூர், ராமாபுரம், பெரியார் தெருவில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகவும் தனிப்படை போலீசாருக்கு மற்றொரு ரகசிய தகவல் நேற்று முன்தினம் இரவு வந்தது.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு  சென்று குடோனை சோதனை செய்தனர். அப்போது அங்கு மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 650 கிலோ  குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக,  போலீசார் குடோனின் உரிமையாளர், அதே பகுதி பாலாஜி தெருவைச் சேர்ந்த அப்பாஸ் (36) என்பவரையும்,  அவருக்கு உடந்தையாக இருந்த ஊழியர்கள் கோயம்புத்தூர் மாவட்டம், உடையார்பாளையத்தில் சார்ந்த சூரியபிரகாசம் (23), நெல்லை மாவட்டம், நாங்குநேரி தாலுகா காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த கோபால் (25) ஆகியோரை பிடித்து அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். புகாரின் அடிப்படையில், அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கோயம்புத்தூரைச் சேர்ந்த கண்மணி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். இதன் பிறகு, போலீசார் கைது செய்த மூவரையும் அம்பத்தூர் கோர்ட்டில் நேற்று மதியம் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Gudka ,house ,Kuton ,Avadi ,
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்