ஈரோடு, ஜன.30: கோபி, கெட்டி செவியூர் பள்ளிபாளையம் புதுக்காலனியை சேர்ந்தவர் திருமுருகன். இவரது மகள் ஜீவிதா (17). இவரது பெற்றோர் இறந்துவிட்டதால், சித்தப்பா சண்முகம் (38) பராமரிப்பில் வசித்தார். ஜீவிதா 12ம் வகுப்பு படிக்கும் போது, விடுமுறையில் குன்னத்தூரில் தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சென்றார். அப்போது, அந்த பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கோபி மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஜீவிதாவிற்கு 18 வயது ஆகாததால் ஸ்ரீதருக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
மேலும், ஜீவிதாவை மீட்டு ஈரோடு கஸ்பாபேட்டையில் உள்ள இல்லத்தில் கடந்த 19ம் தேதி போலீசார் விட்டு சென்றனர். அங்கிருந்து ஜீவிதா யாருக்கும் தெரியாமல் வெளியே சென்றதால், கொள்ளுக்காட்டு மேட்டில் உள்ள அரசு காப்பகத்தில் விடப்பட்டார். காதலனை பிரிந்த ஏக்கத்தில் இருந்த ஜீவிதா கடந்த 24ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். இதைப்பார்த்த காப்பக ஊழியர்கள் ஜீவிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.