ஈரோடு, ஜன. 30: பொல்லான் வரலாறு மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் வடிவேல் தலைமையில் நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர். அந்த கூறியிருப்பதாவது:கொங்கு மண்டலத்தில் வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போரிட்ட தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக இருந்தவர் பொல்லான். தாழ்த்தப்பட்ட அருந்ததியர் சமுதாயத்தை சேர்ந்தவர். மாவீரன் பொல்லானுக்கு மணிமண்டபம் மற்றும் நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என கடந்த 2 ஆண்டுகளாக அனைத்து அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளோம்.
சுதந்திர போராட்ட வீரர் பொல்லான் ஆங்கிலேயரால் சுட்டக் கொல்லப்பட்ட இடமான ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகா நல்லமங்காபாளையத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் 2 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசு புறம்போக்கு இடத்தில் நினைவு சின்னம் கட்டப்பட்டது.
இதை வருவாய்த்துறையினர் இடித்து விட்டனர். மீண்டும் நல்லமங்காபாளையத்தில் உள்ள இடத்தை தேர்வு செய்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும் அந்த இடத்தில் நினைவு சின்னம் அமைக்க நிலம் ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பிக்க வேண்டும். சுதந்திர போராட்ட வீரர் பொல்லானுக்கு அரச்சலூரில் ஒருகோடி ரூபாய் மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டிக் கொடுக்க வேண்டும் என கூறி உள்ளனர்.