கந்தர்வகோட்டை, ஜன.29: வட்டாட்சியர் அலுவலக ஊழியர்களை சரிகட்ட இன்பசுற்றுலாவிற்கு தாசில்தார் அழைத்து சென்றதால் கந்தர்வகோட்டையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கந்தர்வகோட்டை தாலுகா பகுதியில் பெரும்பான்மையான பகுதிகள் கஜா புயலின் கோர தாண்டவத்திற்கு ஆளானது. 36 ஊராட்சி பகுதிகளில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதில் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் நிவாரண பட்டியலில் குளறுபடி ஏற்பட்டது.
இதனால் ஆங்காங்கே மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சில இடங்களில் கிராம உதவியாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்களை நேரில் திட்டி தீர்த்தனர் பொதுமக்கள்.இந்நிலையில் கந்தர்வகோட்டை தாசில்தார் ஆரமுததேவசேனா சில நாட்களில் மாற்றலாகி செல்லவுள்ளார். இதனால் அவரும், தேர்தல் துணை வட்டாட்சியர் செல்வகணபதி ஆகியோர் வட்டாட்சியர் ஊழியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவி யாளர்களை நேற்று முன்தினம் இன்ப சுற்றுலாவிற்கு அழைத்து சென்றனர். சுற்றுலாவில் அனைவருக்கும் புளியோதரை மற்றும் தயிர் சாதம் தாலுகா அலுவலகத்திலேயே தயார் செய்யப்பட்டு எடுத்து செல்லப்பட்டது. அதற்கான வாடகை பாத்திரங்கள் மற்றும் கேஸ்அடுப்புகள் வரவழைக்கப்பட்டிருந்தது.
காரைக்கால், வேளாங்கன்னி மற்றும் நாகூர் பகுதிகளில் சென்று சுற்றிபார்க்க வைத்தனர். ஊழியர்களை திருப்தி படுத்தும் விதமாக தாசில்தார்கள் செய்தாலும் ஊழியர்களுக்கு கோபம் தனிந்த பாடில்லை. அதிகாரிகளின் அழைப்பின் பேரில் கட்டாயமாக சுற்றுலா சென்றுள்ளனர்.
இச்சம்பவம் கஜா புயலால் அதிகளவில் பாதிக்கப்பட்டு இன்று வரை சரி செய்யப்படாத நிலையில் தாசில்தார் சுற்றுலா அழைத்து சென்ற விஷயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.