பூந்தமல்லி: சென்னை போரூர் அடுத்த சமயபுரம், 9 வது தெருவை சேர்ந்தவர் பால தண்டாயுதம் (74). இவர் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் உள்ள ஆய்வு கூடங்களுக்கு கெமிக்கல் மற்றும் உபகரணங்களை சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மணிமேகலை (68), ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிரியை.நேற்று முன்தினம் இரவு இருவரும் அறையில் தூங்கச் சென்று விட்டனர். காலையில் எழுந்து பார்த்தபோது மற்றொரு அறையில் உள்ள பீரோவிலிருந்த துணிகள் எல்லாம் சிதறிக்கிடந்தன. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 25 சவரன் நகைகள், ₹1 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. தகவலறிந்து மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்தனர். இதில் மாடி வழியாக வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள் பீரோவில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.